Facebook users



சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வேப்பிலை, துளசி வைத்து பூஜை

 காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், வேப்பிலை, துளசி உள்பட ஆறு பொருட்கள், நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது.



இதில் பக்தர்கள் கனவில், சிவன்மலை ஆண்டவர் தெரிவிக்கும் பொருள் வைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. இதில் இடம் பெறும் பொருளுக்கு கால அளவு இல்லை. அடுத்த பக்தர் வந்து கூறும் வரையில், முந்தைய பொருளுக்கு பூஜை நடக்கும். இந்த பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும். அதாவது ஏற்றமும் பெறலாம், இறக்கமும் அடையலாம். அதேசமயம் சமுதாயத்தில் நடக்கப்போகும் பரபரப்பான செயலின் குறியீடாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடைசியாக கடந்த ஏப்.,23ல் குங்குமம் வைத்து, நேற்று முன்தினம் வரை பூஜிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த நாகேஸ்வரி, 31, என்ற பெண் பக்தர் கூறியபடி, வேப்பிலை, துளசி, வில்வம், அருகம்புல், விபூதி, மஞ்சள் துாள் என ஆறு பொருட்கள், நேற்று முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இடம் பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவும் நிலையில், மருத்துவ குணம் மற்றும் பக்தியின் அடையாளமான விபூதி இடம் பெற்றுள்ளது, பக்தர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular Posts